உள்ளத்தைக் கொன்று விட்டாய்...! 028
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
உள்ளத்தைக் கொன்று விட்டாய்..
கண்ணே, காலைக்
கதிரின் வரவே
என் இதயம்
நேசிக்கும் உறவே
வெண் நிலவை
ஏந்தும் இரவே
என் மனதுக்குள்
ஏனோ சென்று விட்டாயே
அன்பே, ஆயுள்
நீட்டும் அமுதே
அலைகடல் ஓசையே
கலையாத கனவே
என் காதல்
விதையின் வேரே
தஞ்சம் அளித்து
என்னை தின்று விட்டாயே,
நனையும் எண்ணங்கள்
நம்முடன் இருக்க
அணையும் தீயாய்
ஆனேன் உன்னால்
எண்ணிலா யுகங்கள்
இனியும் வேண்டுமே
என்னுள் நீங்கா
நினைவாய் நின்று விட்டாயே,
நீளும் இரவில்
நினைவோ உன்னோடு
நீயின்றி நானோ
கொம்பில்லாக் கொடியே
உன்னில் என்னை
வென்று விட்டாயே
நம் விரல்கள்
சேர்ந்த தூரிகையாலே
வாழ்வில் வானவில்
வரைந்து விட்டோமே
தமிழின் தீஞ்சுவையே
திகட்டாத அழகே
என் உள்ளத்தை
நீயே கொன்று விட்டாயே
- கவிஞர் முனைவர் சகுந்தலா ராமலிங்கம், உடுமலைப்பேட்டை.
Comments (0)