மகாகவி பாரதியார்..! 076
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
மகாகவி பாரதியார்
பாரதம் என்னும் காட்டில் பற்றிய அக்கினிக் குஞ்சு/
பாரெங்கும் சுட்டெரித்தது தன் அனல் கவிகளால்/
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொட்டிய முரசவன்/
நாணும் அச்சமும் நாய்களே பூணுமென்ற கவியரசவன்/
ஞான நல்லறம் வீர சுதந்திரம் போன்ற அணிகளைப்/
பூண வேண்டும் நற்குடிப் பெண்கள் என்றான்/
சாதிகள் இல்லையெனச் சாட்டையைச் சுழற்றி/
நீதியை நிலை நாட்டிய நிமிர்ந்த நெஞ்சினன்/
நேர்கொண்ட பார்வைகொண்டு உயிர்த்தெழச் செய்தான்/
சீர் கொண்டதை மறந்த சிங்கமறப் பெண்களை/
அவன்பேனா மையைக் கொண்டு வரைந்த காவியங்கள்/
பெண்மையை அழகாகத் தீட்டிய ஓவியங்கள்/
மலையும் ஆறும் நதியும் குயிலும்/
சிலையும் கலையும் உயிர் பெற்றன அவன் பாக்களால்/
மண்ணில் புதைந்து மக்கிப்போய் இருந்த வீரமும்/
மண்ணைத் துளைத்து முளைக்கத் தொடங்கின/
இந்திய நாடெனும் எழில்மிகு வேடந்தாங்கலில்/
இளைப்பாற வந்த வெள்ளைப் புறாக்கள்/
இந்தியாவைச் சொந்தம் கொண்டாடிய போது/
இடி முழக்கக் கவியெனும் பெருவெடி வெடித்து/
விரட்டியடித்த வீரன் எச்சூழ்ச்சியிலும் வீழாவிதையவன்/
காலம் கட்டுண்டு சென்ற கவிகளுக்கெல்லாம் மகாகவியே/
உன் மீசை முறுக்கு எம் தமிழின் செருக்கு/
தேனினும் இனிய தீந்தமிழ் உள்ள மட்டும்/
திக்கெட்டும் பரவட்டும் உன் புகழ் பாரதீ!/
ஆ. பாலம்மாள்
65 A, மேற்கு மாடத் தெரு,
புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி- 635001
Comments (0)