உதிர்ந்த சருகு....
புதுக்கவிதை
கண்களை முத்தமிட்டது
முதலில் சங்குப் பூனை தான் என்றிருந்தேன்
ஆனால் அரசமரத்தின் முதிய சருகு
முகத்தில் வரிகள்
சொரசொரப்பாய் உரசும் போது
நிழல் விலாசம் தேடி என்னிடம் வந்தது
காற்றோடு போகும் முன்பு
விடைபெறும் கலாச்சாரம் இது
முதுகின் வரிகளை நீவிவிட்டேன்
காலம் அற்புதமான ஒரு கவிதையை
எழுதியிருக்கிறது
உதிர்ந்த ஒரு நட்சத்திரத்திற்கு
சற்றும் குறைவில்லை நீ
என்று சொல்லி முத்தமிட்டேன்
வாஞ்சையோடு கன்னத்தில் உரசியபடி
காற்றோடு போகும் முன்பு
என் காதில் கிசு கிசுத்தது
" ஒரு உதிர்ந்த சருகை விட
சற்றும் உயர்ந்தவனல்ல நீ "
தங்கேஸ்
Comments (0)