எனக்குப் பிடிச்ச கலரு... 016
சிந்தனைச் சிற்பி விருது சிறுகதை போட்டி
மதனுக்கு ஏனோ கறுப்பு, இருட்டு என்றால் பயம். அவனிடம் கருப்பைத் தவிர மற்ற எல்லா வண்ணங்களிலும் உடைகள் இருந்தன.
ஆசிரியர் உங்களுக்குப் பிடித்த வண்ணம் பற்றி ஒரு கட்டுரை எழுதி வாருங்கள் என்று சொல்லியிருந்தார்.
மதன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு. நமக்குத்தான் கறுப்பு தவிர்த்து எல்லா வண்ணமும் பிடிக்குமே. எந்த வண்ணத்தைப் பற்றி எழுதுவது என குழம்பினான். அப்படியே தூங்கியும் விட்டான்.
காலையில் போட்ட சிவப்புசட்டை சாயந்திரம் கறுப்பாய் மாறிய மர்மம் புரியாமல் திகைத்து நின்றான்.
"அம்மா இதென்ன நான் போட்ட சட்டை இப்படி கலர் மாறியிருக்கு?"
எனகென்னடா தெரியும். நீதான் உன் நண்பனோட ட்ரெஸ் போட்டுட்டு வந்துட்டன்னு நினைச்சேன். உனக்கு வேற வேலையே இல்ல.
அவன் அறைக்குச் சென்றான். முதுகை யாரோ தட்டுவது போல இருந்தது. பின்னால் பார்த்தால் யாருமே இல்ல. யாரது?
நான்தான் கறுப்பு நிறம் பேசுறேன்.
"என்னது நிறம் பேசுமா? அதுவும் எனக்குப் பிடிக்காத நிறம் நீ. உன்னுடன் நான் பேச மாட்டேன்" என்றான்.
"உனக்கு யார் மாதிரி இருந்தால் பிடிக்கும்?"
"எனக்கு யார் மாதிரியும் பிடிக்காது. எல்லார் சொல்வதையும் கேட்பேன். எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன்."
"அதேதான் நானும் செய்றேன்"
"என்ன சொல்ற? எனக்குப் புரியல."
"ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குகிறது. அப்படிபட்ட பொருள், தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிகொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கவில்லையெனில், அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது. இது தான் அறிவியல் காரணம் புரியுதா?"
ஓ! நீயும் என்ன மாதிரி தானா? அப்ப எனக்கு இனி உன்னையும் பிடிக்கும். கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு என்று பாட்டு பாடினான் மதன்.
"டேய்., ஸ்கூலுக்கு நேரமாச்சு எந்திரி"
அடடா இவ்வளவு நேரம் கனவா கண்டேன். எப்படியோ கருப்பு கலரும் இனி எனக்குப் பிடிக்கும். அதனால் கனவில் கறுப்பு கலர் சொன்னதையே கட்டுரையா எழுதிட வேண்டியது தான் என்று நினைத்து ஸ்கூலுக்குக் கிளம்பினான்.
- ஜெயா சிங்காரவேலு, கரூர்.
Comments (0)