குலதெய்வங்கள்

குலதெய்வங்கள் கவிதை

குலதெய்வங்கள்

குலதெய்வங்கள்

பொங்கல் வைத்தால் 
முதல் தளுகை
வேண்டுமென்று கேட்கமாட்டார்
திரை கட்டிக்கொண்டு
உடை மாற்றுவதும்
உணவு உண்பதும் கிடையாது
எல்லோருக்கும் கிடைக்கும் போதுதான்
அவருக்கும் கிடைக்கும்

சாமி சுத்த அசைவி
வாசலில் வெட்டப்பட்டு கிடக்கும்
கருங்கிடாய்களோ
கொண்டைச் சேவல்களோ
அவரவருடைய ஏல்க்கையை
பொருத்தது

கூடமுடைய அய்யனார்
குதிரை மேல் கருப்பசாமி
நாலு திசையும் காவல் ஏற்கும்
சேத்தூர் முத்தையா
கலுங்கல் மாடன்கள்
எதுவாக இருந்தாலும்
எல்லோரும் சமதையாக
பிரித்துக் கொள்வார்கள்

ஆத்து மேட்டில் நெடிதுயர்ந்து வளரந்திருக்கும் மரங்க,
இலுப்பை மரத்தின் கிளைகளில்
எப்போதும் தொட்டில்கள் ஆடிக்கொண்டிரும்

கறி கொதிக்க கொதிக்க
சுற்றியுள்ள கருவேலங்காட்டுக்குள்
மதுப் புட்டிகளும் மாமன் மச்சினன்
பங்காளிகளும்
சீழ்க்கையொலிகளும் சிதறி கிடக்க
பெருசுகளும் சிறிசுகளும்
கருப்பசாமி தங்களோடு வந்து
கிளித்தட்டு ஆடிய கதைகளை
சொல்லி  சொல்லி மகிழ்ந்திருப்பார்கள்

கூடமுடையாரை முறை வைத்து கூப்பிடுகிறவர்களும்
சேத்தூர் முத்தையாவிடம்
நேர்த்திக்கடன் செய்கிறவர்க்கும்
கலுங்கல் மாடனுக்கு புதுவேட்டி
துண்டு கட்டுபவர்களும்
அங்கங்கே  காலடியில் காலடியில்
குவித்திருக்கும் திருநீறை விரல்களில்
எடுத்து
பட்டையடித்துக் கொண்டு போவர்கள்

தலப்புள்ள மொட்ட
காதுகுத்து
பேரு வைப்பு
எல்லாம் எங்களுக்கு
ஆத்தோரம்குலதெய்வம்

ஒவொரு வீட்டிலும் பாட்டன் மார்
பூசாரிகள் தான்
மாசிப் பச்சிக்கு
எள்ளுப் போட்டா எள்ளு கீழ விழுகாது
விடிய விடிய
கதை கதையாக சொல்லுவார்கள்

"தினமும் பால் கறந்து வார. இடையனை
இந்த இழுப்பை வேர் தட்டி விடுது
கோபத்துல ஒரு நாள்
அது மேல கோடாரியை போட்டான்
போட்டது தான் தாமசம்
அம்மா இரத்தம் வானத்துக்கும் பூமிக்கும்
பீச்சி அடிக்கும்
உத்துப்பார்த்தா  உள்ள லிங்கம்
சுயம்பு லிங்கம்
சட்டுன்னு கூடையைப் போட்டு கவுத்துனாம்
அதிலயிருந்து கூடலிங்கம்"

வருசம் உருண்டு போச்சு
வயித்துப் பொழப்புக்காக
இந்த நகரத்துக்கு வந்து

இருபது வருடங்கள் கழித்து
சொந்த ஊருக்குப் போகிறேன்
போகும் போதே முதலில் கால்கள்
என்னை இழுத்துக் கொண்டு போனது
குலதெய்வம் கோவிலுக்குத்தான்

இலுப்பை மரம் பட்டுப் போச்சு
ஆத்துல தண்ணி அத்துப் போச்சு
சுத்திலும் கடைகளா மொளச்சிருக்கு
கோயிலை சுத்திலும் பிரகாரங்கள்
அங்கங்கே சாதிக் கொரு மண்டபங்கள்
மூலவரை பார்க்க விடாம முடுக்கி முடுக்கி
போட்ட தடுப்பு கம்பிகள்
அரையடிக்கு ஒரு அன்னதான உண்டியல்

அய்யோ சத்தியமா அங்க
எங்க கூடமுடையாரை பார்க்க முடியலை
எங்க குல தெய்வம்
பெருந்தெய்வம் ஆகிப்போச்சு
பூசாரி இருந்த இடத்தில்
இப்ப குருக்கள் அமர்ந்திருக்கிறார்
விரல் தொடாமல் திருநீறை
வீசி எறிந்து கொண்டிருக்கிறார்

சாமியப் பார்க்க முடியுமா என்று
கேட்டேன்
கருவறையில் பளிங்கு கல்
பதிக்குறாங்க
இப்போதைக்கு
முன்னால போய் அதை 
தொட்டுக் கும்பிட்டுப் போ என்றார்கள்
நான் வெறும் புகைப்படத்தை
தொட்டுப்பார்க்கவில்லை
வெளியில் வந்து ஆசை தீர
இலுப்பை மரத்தை தொட்டுப்பார்த்தேன்

தங்கேஸ்