தமிழரின் பெருமைகள்...! 026

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழரின் பெருமைகள்...! 026

தமிழரின் பெருமை

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று தமிழரை அடையாளப்படுத்தினார் நாமக்கல் கவிஞர். வேறு எந்த இனத்திற்கும் இல்லாத பெருமை தமிழுக்கும் தமிழருக்கும் உண்டு. காரணம் மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக்கூடாது என்று வாழ்வியலை கற்றுக் கொடுத்த தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்றும் உலகம் முழுவதிலும் தடம் பதித்து இருக்கிறது என்றால் உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும் சமூகம் எனும் மணற்பரப்பில் விதைத்து சென்றிருக்கிறது என்று தானே அர்த்தம். பண்பட்ட மண்ணில் தான் செடிகளும் கொடிகளும் துளிர்விடும் அதுபோல இந்த சமூகம் பண்பட வேண்டும் என்றால் நல்ல பண்பாடு இருக்க வேண்டும் என்பதனை தமிழினம் இத்தரணிக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறது நாடாண்ட மன்னன் முதல் குடிசை வாழும் சாதாரண குடிமகன் வரை குலம் காக்கும் பண்பாட்டை கட்டிக்காத்து பார் போற்ற வாழ்ந்த இனம் தமிழினம். இது வரலாற்றுப் பதிவு. இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இணையம் வரைக்கும் தமிழரின் பண்பாடும் பதிவுகள் தன்னை காட்சிப்படுத்தி நிற்கிறது. நாகரிகங்கள் என்ற பெயரில் தலைமுறை கடந்து விட்டாலும் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் வாழ்வியலின் ஒவ்வொரு தளத்திலும் பின் தொடர்ந்து வருகிறது.

*விருந்தோம்பல்*

தமிழரின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல். வீட்டிற்கு வரும் உறவினர்களை மட்டுமல்ல, முகம் தெரியாத யாராக இருந்தாலும் அவர்களை அன்போடு உபசரித்து முகம் மலர உணவளித்து உள்ளன்போடு வழி அனுப்பும் வாழ்வியலை தருகிறது தமிழரின் பண்பாட்டுக் கோட்பாடு. காலம் காலமாக இப்பண்பாட்டை கட்டி காத்து வருவது நம் தனிச்சிறப்பு. இதிலும் ஒரு படி மேலே சென்று இது குடும்ப தலைவியின் கடமைகளில் ஒன்றாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தமிழரின் ஈகை பண்பாட்டிற்கு இணையாக நாம் எதையும் சொல்லிவிட முடியாது. மனிதனுக்கு மனிதன் மட்டும் உதவுவது ஈகை அல்ல. படர்ந்து செல்லும் செடி கொடிகளுக்கும் கூட உற்றுழி உதவி செய்தது தமிழினம்.

*வீரம்*

கொடுப்பதிலும் பெறுவதிலும் மட்டும் பண்பாட்டை காட்டவில்லை. வீரத்திலும் பண்பாட்டை விதைத்துச் சென்றவன் தமிழன். எதிரி நாட்டு படையினை தாக்கும் பொழுது கூட ஈரமும் இரக்கமும் இருந்ததனை காண முடியும். புறமுதுகிட்டு ஓடுவதும், புற முதுகில் அம்பு பட்டு விழ்ந்து போவதும் அவமானம் என கருதிய பரம்பரை தமிழ் பரம்பரை. போரில் தந்தையை இழந்து, கணவனை இழந்து இறுதியில் தனக்கு உதவியாக இருக்கும் ஒரே மகனையும் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த புறநானூற்றுத் தாயும் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்வோம் இதுதான் தரணி போற்றிய தமிழர் பண்பாடு என்பதனை உலகிற்கு உரக்கச் சொல்வோம். 


*தீதும் நன்றும்*

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் உயரிய பண்பாட்டை உரக்கச் சொல்லியதும் தமிழினமே. நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நம்மிடம் திரும்பி வருகிறது. நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டதே நடக்கும். இதுதான் வாழ்வியல் எதார்த்தம். ஒழுக்கத்தோடு வாழ பழகிக் கொள்ளுங்கள் எனும் உயரிய சிந்தனையை எடுத்துச் சொல்லி இருக்கிறது. சமூகம் நலம் பெற நாடு வளம் பெற ஒவ்வொரு தனி மனிதனும் ஒழுக்கத்தோடு வாழ வேண்டியது அவசியம். உலகம் போற்றும் இது போன்ற உயர்வான பண்பாட்டுக் கருத்துக்களை உலகறிய செய்தது தமிழரும் தமிழர் பண்பாடும் என்பதுதான் உண்மை. 

*யாதும் ஊரே*

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழன் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று ஒற்றுமை வாழ்க்கைக்கு தன் பண்பாட்டு அடிச்சுவட்டை பதிவு செய்து சென்றிருக்கிறான். எல்லா நாடும் நம் நாடே எல்லா ஊரும் நம் ஊரே. எல்லா உறவுகளும் நம் உறவுகளே இதில் வேற்றுமை வேண்டாம் என சொன்ன இனம் தமிழினம் இப்பண்பாட்டுக் கோட்பாட்டை பின்பற்றி வந்தால் நமக்குள் சண்டைகளும், வழக்குகளும் அண்டாது. சரித்திரம் போற்ற வாழும் வாழ்க்கை நம் வசமாகும். காலங்கள் ஓடிவிட்டது. தலைமுறை கடந்து விட்டது. அறிவியலின் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்து விட்டது. ஆனாலும் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் வாழ்வியலின் ஒவ்வொரு தளத்திலும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரைக்கும் பண்பாடு போற்றப்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் வாழ்வியலின் ஒவ்வொரு நகர்விலும் பண்பாடு கடைபிடிக்கப்படுகிறது. உறவுகள் தொடங்கி இறைவழிபாடு வரைக்கும் பண்பாடு பறைசாற்றப்படுகிறது. இல்லறம் முதல் துறவறம் வரை பண்பாட்டு வாழ்வியல் பகிரப்படுகிறது.

*முடிவுரை*

இப்படியாக ஊருக்கும் உலகிற்கும் உன்னத கருத்துக்களையும் உயர்வான எண்ணங்களையும் தனி மனித ஒழுக்கத்தையும் பண்பாடு என்ற பெயரில் அள்ளிக் கொடுத்த தமிழரின் தலைசிறந்த நாகரீக வாழ்வியலை உலகம் உச்சி நுகர்ந்து போற்றுகிறது. வழியில் வந்து செல்லும் வழிப்போக்கர்கள் கூட அமர்ந்து செல்ல திண்ணை அமைத்து வீடு கட்டிய தமிழரின் பண்பாட்டுக் கோட்பாட்டை யாரும் புறந்தள்ளி விட முடியாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழர் பண்பாடு தலைநிமிர்ந்து நிற்கும். தரணி போற்றும் தமிழரின் பண்பாட்டை இந்நாளில் நாமும் போற்றுவோம். 

- வே. சாந்தி, 
இடைநிலை ஆசிரியர், 
சொக்கலால் சரஸ்வதி சத்திரிய வித்யா சாலா ஆரம்பப்பள்ளி, 
முக்கூடல். 
திருநெல்வேலி மாவட்டம்.