மாசற்ற புன்னகை ...!

புதுக்கவிதை

மாசற்ற புன்னகை ...!

ஒரு மாசற்ற புன்னகைக்கு
நான் உலகத்தையே
தந்துவிடுவேன்
ஆனால் அது என்னுடையதில்லை

நீ என்னுடைய பிரத்யேகமான
உலகத்தை கேட்டாலும்
காட்டுவதற்கு ஒன்றுமில்லை
வாசலில் பூத்துக் கிடக்கும்
கொத்து மஞ்சள் அரளிப் பூக்களும்
அதில் தேனெடுக்கும்
கருநீல தேன் சிட்டுக்களையும் தவிர

நான் நிலவை காட்ட நினைக்கலாம்தான்
ஆனால் நினைக்கும் போதே 
அது
மேகத்திற்குள் மறைந்து விடும்
சரி ஒரு கள்ளமற்ற புன்னகையை
காட்சிப்படுத்தலாமென்றால்
அது ஒளியாண்டுகளுக்கும் அப்பால்
புதையுண்டு கிடக்கிறது

என் கடவுளோ  உள்ளே வருவதும்
வெளியேறுவதுமாக
கண்ணாமூச்சி
ஆடிக்கொண்டிருக்கிறார்

வேண்டுமானால்
அதிகாலைப் பனித்துளியைப் போல
சற்றும் மாசடையாத
எனதிந்த நிகழ்காலத்தை
அப்படியே உன்னிடம்
தந்து விடலாம்
ஆனால் அதுவும் கூட
உன் நினைவில் 
புனிதப்படுத்தப்பட்டது தான்

-தங்கேஸ்