காதல் சிலிர்த்துக் கொள்ளட்டும்.. !.005

அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதல் சிலிர்த்துக் கொள்ளட்டும்.. !.005

காதல் சிலிர்த்துக் கொள்ளட்டும்...

என் குறுஞ்செய்திக்கு
பதில் அளிக்காதே...
என் அழைப்புகளை அலட்சியப்படுத்து...
உனக்காக காத்திருப்புகளில்
என்னை கரையவிடு...
எப்போது பேசுவாய் என்று
ஏங்கவிடு...

நொடிகள் தோறும்
நின் நினைவினில் நொறுங்கிட செய்..
ஆதி முதல் அந்தம் வரை
நின் நினைவுகளை புரையோடவிடு...
நான் ஆசையாய் பேச நினைக்கும்
பொழுதுகளில் எல்லாம்
வேலைபளுவென்று சொல்லி விலகியே நில் ..

நான் அனுப்பும் முத்த குறியீடுகளை
காரணங்களின்றி காயப்படுத்து..
உன்னை தழுவிக்கொள்ள விடாமல்
தடுத்து விட்டு எனை தவிக்கவிடு..

ஏனென்று வினவாதே..
எளிதில் கிடைத்துவிடும் எதற்கும்
மதிப்பு தெரியாமல் போய்விடுமாம்...
உந்தன் முதல் முத்தமும்
முதல் ஸ்பரிசமும்
எத்தனை மதிப்பானதென்று
எனக்கு மட்டுமே தெரியுமடா..

பின்னொரு நாளில்
நீ விடும் மூச்சுக்காற்றிலிருந்து
தரைவிழும் நின் நிழல் வரை
எனக்கே உரிமையென என்னுயிரினில்
உயிலொன்றை எழுதிவிடு...
காதல் சிலிர்த்துக் கொள்ளட்டும்...

-சசிகலா திருமால்
கும்பகோணம்.