பாரதியே மீண்டும் பிறந்து வா...! 045
தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி
பாரதியே மீண்டும் பிறந்து வா
எட்டய புரத்தின் எழில்மிகு முத்தே
எழுதிடும் கவிஞரின் புகழ்மிகு சொத்தே
கவிஞர் பலரது கவின்மிகு வித்தே
காவிய மாகிய கவியிளங் கொத்தே
சின்னச் சாமியின் சீர்மிகு புதல்வரே
வண்ணக் கவிஞரின் வனப்புறு முதல்வரே
எண்ணச் சிறகினை விரித்திடும் கவிஞரின்
ஏணியாய் எழுந்தவரே மகாகவி பாரதியே
பெண்ணியம் போற்றிய பேறுடை நற்றவரே
கண்ணிய மானதோர் கவிதையின் கொற்றவரே
திண்ணிய நெஞ்சுடன் தீரமாய் எதிர்த்தவரே
மண்ணிலே அடிமையின் மாசினைத் துடைத்தவரே
எண்ணம் சிறந்தால் எதிர்காலம் சிறக்குமென
எண்ணிலா பாக்களில் எளிமையாய்ச் சொல்லியே
எண்ணரும் சிந்தனை ஏற்றமிகு பாக்களால்
கண்ணென மாதரை தரணியாள அழைத்தவரே
புரட்சிக் கவிகளே மிரட்சி கண்டிட
திரட்சிக் கவியினால் தீர்க்கமாய் உரைத்தவா
கற்பனையின் சிறகினால் காலமெலாம் பறந்தவா
அற்புதக் கவிதர மீண்டும் பிறந்துவா!
அஃறிணையும் போற்றியே அழகுதமிழ் சாற்றியே
ஆன்றோராய் பாரதியாய் அருந்தமிழ் பகர்ந்தவா
சான்றோராய் தீரமுடன் மீண்டுமாய் பிறந்துவா!
சரித்திரம் இயற்றுவோம் சாதனை படைத்திடுவோம்
-செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்,
வேம்பார்.
Comments (0)