பாரதியே மீண்டும் பிறந்து வா...! 045

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதியே மீண்டும் பிறந்து வா...! 045

பாரதியே மீண்டும் பிறந்து வா

எட்டய புரத்தின் எழில்மிகு முத்தே 
எழுதிடும் கவிஞரின் புகழ்மிகு சொத்தே 
கவிஞர் பலரது கவின்மிகு வித்தே 
காவிய மாகிய கவியிளங் கொத்தே

சின்னச் சாமியின் சீர்மிகு புதல்வரே 
வண்ணக் கவிஞரின் வனப்புறு முதல்வரே 
எண்ணச் சிறகினை விரித்திடும் கவிஞரின் 
ஏணியாய் எழுந்தவரே மகாகவி பாரதியே

பெண்ணியம் போற்றிய பேறுடை நற்றவரே 
கண்ணிய மானதோர் கவிதையின் கொற்றவரே 
திண்ணிய நெஞ்சுடன் தீரமாய் எதிர்த்தவரே 
மண்ணிலே அடிமையின் மாசினைத் துடைத்தவரே

எண்ணம் சிறந்தால் எதிர்காலம் சிறக்குமென 
எண்ணிலா பாக்களில் எளிமையாய்ச் சொல்லியே 
எண்ணரும் சிந்தனை ஏற்றமிகு பாக்களால் 
கண்ணென மாதரை  தரணியாள அழைத்தவரே

புரட்சிக் கவிகளே மிரட்சி கண்டிட 
திரட்சிக் கவியினால் தீர்க்கமாய் உரைத்தவா 
கற்பனையின் சிறகினால் காலமெலாம் பறந்தவா 
அற்புதக் கவிதர மீண்டும் பிறந்துவா!   

அஃறிணையும் போற்றியே  அழகுதமிழ் சாற்றியே 
ஆன்றோராய் பாரதியாய் அருந்தமிழ் பகர்ந்தவா 
சான்றோராய் தீரமுடன் மீண்டுமாய் பிறந்துவா! 
 சரித்திரம் இயற்றுவோம் சாதனை படைத்திடுவோம் 

-செந்தமிழ்ச்சுடர் அ.செலஸ்டின் மகிமை ராஜ்,
வேம்பார்.