அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்...! 016
அறிஞர் அண்ணா அறிவுச்சுடர் விருது கவிதை போட்டி
அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்..
வாழ்க்கை பாறையை
அறிவெனும் உளிக்கொண்டு
அழகிய சிற்பமாய்
செதுக்கிட செப்பியவரே...
கடமை, கண்ணியம்
கட்டுபாடு போன்றவற்றை
உடைமைகளாய் தந்திட்ட
உவமையிலா உத்தம தலைவரே...
எளியவர்களையும்
எளிதாய் ஈர்த்திடும் வண்ணம்
அற்புதமாய் உரையாடும்
ஆற்றல்மிகு பேச்சாளர்...
அறிவுலக மேதை
கண்ணியமிக்க அரசியல் தலைவர்..
அடுக்கு மொழிகளில்
அசத்திடும் வல்லவர்
வலிமைமிகு எழுத்தாளர்..
தடுக்கிவிழும் அவரின் வார்த்தைகளும்
தரணியில் தவழும்
தமிழன்னையோ தடையின்றி
அவர் நாவினில் தங்கும்..
தட்டியெழும் தமிழுணர்வை
விழிக்க செய்யவே
தமிழ் எனும் மொழியையும்
நாடு எனும் நிலத்தினையும் இணைத்து
தமிழ்நாடு என்று உரு கொடுத்தவர்
தமிழைத் தலைநிமிரச் செய்த
ஒரே தமிழினத் தலைவர்...
வான்முட்டும் நின் புகழை
கவிதை வரிகளில் அடக்கிடவியலாமல்
தமிழும் தடுமாறுகிறது பார்..
ஆம்... ஆகாயம் கூட
ஆச்சரியமாய் விரிகிறது
நின் புகழ் கண்டே..
சசிகலா திருமால்
கும்பகோணம்.
Comments (0)