நந்தவனத்து நாயகி... 042
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
நந்தவனத்து நாயகி
தாமரை முகத்தழகியே எந்தன்
தனிமை போக்க வருவாயா?
ரோஜா மலர் நீ தானோ! உன்
முட்களை நான் அகற்றிடுவேன்!
மல்லிகை போல் நம் காதல்
மணம் பரப்புமோ வையகத்தில்!
முல்லையும் உன் சிரிப்பில் மயங்கி
முகிழ்க்கவும் மறந்ததுவோ!
செங்காந்தள் பூக்களும் உந்தன்
விரல்களில் ஒளிந்தனவோ!
மருக்கொழுந்து வாசத்தில் ஏனோ
உன் நினைவு மணக்குதடீ!
செண்பகப் பூ சிரிப்பழகி நீயே!
சிந்தையிலே குடி கொண்டாய்!
பவழமல்லிப் பூக்களும் உன்முன்னே
தூய்மையைத் தொலைத்தனவோ!
சூரியகாந்திப் பூவழகியே! நானும்
கதிரவனாக ஆசை கொண்டேன்!
செம்பருத்திப் பூ உனைக் கண்டு
நாணித் தான் சிவந்ததுவோ!
சாமந்தி மலருன் முகம் கண்டு
தோற்று நிறம் வெளிறியதோ?
நந்தவனமாக எதிரே நீ வருகையில்
வண்டுகளை நான் என் செய்வேன்!
- புவனா சந்திரசேகரன்.
Comments (0)