புண்ணிய புரட்டாசி மாதம்

புண்ணிய புரட்டாசி மாதம்

புண்ணிய புரட்டாசி மாதம்

புண்ணிய புரட்டாசி மாதம்

பழமை வாய்ந்த
மகத்துவம் நிறைந்த மாதம்!
திருநாமம் அணிந்து,
மஞ்சளாடை உடுத்தி,
மண்பானையில் தளிகை படைத்து,
துளசிமாலை பெருமாளுக்கு சார்த்தி,
தூய மனதுடன் திருப்பதிக்கு
பாதயாத்திரை செல்லும் மாதம்!

12 நாள் பிரமோற்சவம்,
7 நாள் தெப்போற்சவம்,
வண்ண விளக்குகள் அலங்காரம்,
180 வருட சம்பிரதாயம் கண்ட,
கருடன் மகிழ்ந்து வட்டமிட,
சென்னையிலிருந்து தானமாகும்
9 அடி குடையின் நிழலில்,
8 குடைகள் பின்புறம் ஆடி வர,
"கோவிந்தா!"பக்தி முழக்கத்துடன்,
கருடசேவை/புஷ்பம்/முத்தங்கி சேவை
மனோரஞ்சிதம்/குருவிவேர்மாலைகள்
வீதிவுலா அரங்கனை பேரெழில் கூட்ட,
ரங்கன் நடையழகு,
சதிராடும் குடையழகு,
சக்கரம்/சங்கு படையழகென,
காண்போரை லயிக்க வைக்கும் மாதம்!

கருடன் கொணர்ந்த கருடாத்ரி,
ருஷ்பாசுரனால் ருஷ்பாத்ரி,
நாராயணன் தரும் நாராயணாத்ரி,
நரசிம்மன் பெயரால் சிம்மகிரி,
அஞ்சனை தவத்தால் அஞ்சனாத்ரி,
ஆதிசேஷனின் சேஷாத்ரி,
ரிடபாசுரனால் ரிஷபகிரியெனும்
ஏழுமலைகள் சூழ்ந்த ஏழுமலையை...
கிருஷ்ணாவதாரத்தில் ஆயர்கள் காக்க,
இந்திரன் கோப மழையை தடுத்து,
7 நாட்கள் கோவர்த்தனகிரியை
விரலால் தாங்கி பிடிக்க,
விரல் பட்ட இடங்கள் பாதம் படவும்,
காண வரும் பக்தர்கள் சுமக்கும் வரம்
கோவர்த்தனகிரி பெற்றிட...
ஏழுமலையான அம்மலை மீதிலே,
பாதம் வைத்து பயணித்து,
மேல்மலையினிலே வாசம் செய்ய..
ஏழுமலையானாக நின்ற மாதம்!

புணர்ப்பு தோஷமெனும்
இல்லற வாழ்வு தடை செய்யும்,
சந்திர சனி கிரக சேர்க்கை நீங்கிடவே...
சந்திர ஸ்தலமாம் திருப்பதி சென்று,
புரட்டாசி பௌர்ணமியுள்ள சனிநாளில்,
மஞ்சளாடை தரித்து,
மண்பாத்திரத்தில் தளிகையிட்டு,
பெருமாள் படம் வைத்து,
வேங்கடேச அஷ்டகம் சொல்லி,
துளசியிலையால் அர்ச்சிக்க,
புணர்ப்பு தோஷம் நீங்கி....
திருமணம் கை கூடும் மாதமிது!

மாவிளக்கு வழிபாடு....
மரத்தை வேங்கடவனாக நினைத்து,
தேனும் தினைமாவும் படையிலிட்டு,
வேடனொருவன் பூஜிக்க,
அவனுக்கு பிரசன்னமாகி அருள்செய்த
வேங்கடவனை...
இடித்த பச்சரிசி/ஏலம்/எள்/
அச்சுவெல்லம் கலந்து விளக்காக்கி,
ஏழுமலையாக பிரதிஷ்டை செய்து,
நெய் தீபம் வேங்கடவனாக ஏற்றி பணிய
முக்தி /செல்வ செழிப்பு கிட்டும் மாதம்!

திருவோண நட்சத்திரத்தில்,
திருமலையில் பெருமாளாக ஜனனமாகி,
மகாவிஷ்ணுவின் அவதாரமான
வேதாந்த தேசிகர்
காஞ்சிபுரத்தில் அவதரித்த மாதம்!
ஊமையான குயவன் பரிசுத்த பக்தி
மெச்சி/களிமண் பிரதிஷ்டை/களிமண்
பூக்களின் அர்ச்சனையை  ஏற்று,
மண்பானை தயிர்சாதப் படையலேற்று,
தங்கப்பூ படைத்த தொண்டைமானுக்கும்,
பீமய்யாவிற்கும் கனவில் காட்சி தந்து,
திருமலையில் மண்பானை தளிகை
படையல் வழக்கமான  மாதம்!

கோகுலத்து கண்ணன்
கம்சன் ஏவிய மாயாவை அழிக்க,
சனீஸ்வரன் கண்ணனின் அருள் பெற,
அடுத்து வந்த ஹோலிக்காவை
உக்கிரபார்வை பார்த்து பஸ்பமாக்க,
சனிபகவானின் கெடுபலன்
மறையவென /திருமால்  வழிபாடு
சனிக்கிழமை வழிபாடான மாதம்!

திருமலையில் நாராயணன்
பிரமோற்சவம் காணும் மாதம்!
ஐந்து சனிக்கிழமைகளாக
சிறப்பு தளிகை படையலிட்டு
பெருமாளை வழிபடும் மாதம்!
அலைமகள்/கலைமகள்/மலைமகள்
சிறப்புற நவராத்திரி கொலு வைத்து
விஜயதசமி திருநாளும் காணும் மாதம்!

ஆடி மாரியுள்ள மண்ணுக்கும்
புரட்டாசி பெருமாளுக்குமான மாதம்!
கிருஷ்ணனுக்கு மார்கழியும்
வேங்கடவனுக்கு புரட்டாசியுமான மாதம்!
ஹரி/ஹரியென ஏழு முறை சொல்லி,
திருமண் திலகமிட்டு/திருப்பல்லாண்டு/
திருப்பள்ளியெழுச்சி/விஷ்ணு
சஹஸ்ரநாமம்/சிற்றஞ் சிறுகாலையென
தொடங்கும் 29 வது திருப்பாசுரம்  பாடி
ஸ்ரீனிவாசனை வணங்கும் மாதம்!

தானியம்/காய்கறிகளை
நாடும் சைவ மாதம்!
ஸ்ரீரங்க நாச்சியார் சந்நிதியில்
அலைமகள்/கலைமகள்/
மலைமகளை வழிபடும்
வியாசர் நடைமுறைப்படுத்திய
நவராத்திரி விழா காணும் மாதம்!
முன்னோர்களை வழிபட
மஹாளய அமாவாசை வரும் மாதம்!
வீடுகளில் கொலு வைத்து
எட்டு நாட்கள் போரிட்டு /9 ஆவது நாள்
மகிஷாசுரனை வதம் செய்த வெற்றி
பெற்ற விஜயதசமி கொண்டாடும் மாதம்!

புரட்டாசி மாத பூரட்டாதி நட்சத்திரத்தில்
வரும் பௌர்ணமியில்,
கோதுமை கலந்த வெல்ல அப்பம்
நிவேதனம் செய்து /உமா-மகேஸ்வர விரதம் கடைப்பிடிக்கும் மாதம்!
எமனின் கோரைப்பற்களான
வசந்த ருது/சரத் ருதுவில் வரும்
நோயிலிருந்து தப்பிக்க/18 கைகள்,
ஆயுதம் தாங்கி வீரியம் உடைய
சண்டிகையை வழிபடும் மாதம்!

கருணை மிகுந்த
கிரகதோஷம் போக்கும் ஆஞ்சநேயரை 108 போற்றி கூறி/ வழிபடும் மாதம்!
1180 பல்லவர்/சோழர்/பாண்டியர்/
சாளுக்கியர்/கிருஷ்ண தேவரின்
கல்வெட்டுகள் சூழ்ந்த
புஷ்கரணி தீர்த்தத்தில் குளித்து
பாவம் தீர்க்கும் மாதம்!

வேம்...பாவம்/கடா...அழித்தல்/
ஈசன் ....மிகப் பெரிய கடவுள்
என பொருள்படும் வெங்கடாசலபதியை,
ஆதிசேஷனின் 7 தலைகள்
ஏழு மலைகளாக மாற்றம் கண்ட மாதம்!
வெயிலும்/காற்றும் குறைந்து
மழை ஆரம்பிக்கும் மாதம்!

புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியில்,
காரியசித்தி உண்டாக தூய்மையுடன்
 விநாயகரை வழிபட..
சித்தி விநாயக விரதமிருக்கும் மாதம்!

புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில்,
சர்வ மங்கலங்கள் கிட்ட
பரமேஷ்வரனை நினைத்து...
சஷ்டி லலிதா விரதமிருக்கும் மாதம்!

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில்,
குடும்பம் செழிக்க/சிவனுடன்
விநாயகரை வழிபட்டு....
துர்வாஷ்டமி விரதமிருக்கும் மாதம்!

புரட்டாசி மாத. வளர்பிறை சப்தமியில்
சந்ததி செழிக்க/சௌபாக்கியம் கிட்ட,
12 முடிச்சுள்ள சரடினை வலக்கையில்
கட்டிய பின் உமா மகேஷ்வரன் வணங்க
அமுக்தாபரண விரதமிருக்கும் விரதம்!

புரட்டாசி மாத அஷ்டமி முதல் 16 நாட்கள்
வறுமை நீங்கி/வாழ்க்கை வளம் பெற,
லட்சுமி தேவியை பிரார்த்திக்க....
மஹாலட்சுமி விரதமிருக்கும் மாதம்!

புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில்,
சித்திகளை பெற/சூரியனை பூஜித்து,
பழுப்பு வர்ண பசுமாட்டினை,
ஆபரணங்களால் அலங்கரித்து....
கபிலாசஷ்டி விரதமிருக்கும் மாதம்!

திருவண்ணாமலை வேணுகோபாலசாமியை,
அபிஷேகம் செய்து/வணங்கிட..
வாழ்வில் தடைகள் நீங்கும் மாதம்!

விழுப்புரம் /திருக்கோவிலூர்
சுண்ணாம்பு/மூலிகைகளாலான,
ஆதிசேஷன் மீது சயனித்த
ரங்கநாதரை /இன்பம் தடையற
கிட்டிடவே வணங்கும் மாதம்!

காரைக்கால்/நித்ய கல்யாண
பெருமாளை/சகஸ்ரநாம பூஜை
செய்ய/நோயற்ற வாழ்வுடன்,
வற்றாத செல்வம் கிட்டும் மாதம்!

திருமண வரன் வீடு தேடி வர,
திருவெண்காடு
சுவேதாரண்யேசுவரரை/வீட்டின்
 பெரியவர்கள் வணங்கும் மாதம்!

புதன் கிரகத்தின் அதிதேவதை
மகாவிஷ்ணுவின் அருளினை...
அன்னதானம் செய்து பெறும் மாதம்!

எள்/எண்ணைய் தீபமிட்டு,
சூரிய நாராயணனை வணங்க,
சூரியன்/புதனின் அனுக்கிரகம்...
குறைவின்றி கிடைக்கும் மாதம்!

கலியுகம் முடியும் வரை,
சிலாரூபமாக...அனுதினமும்
ஆயிரக்கணக்கில் பக்தர்களை
வரவழைத்து/திருப்பங்களை
வாழ்வில் வாரி வழங்கும்,
புரட்டாசி மாதம் புண்ணியம் பெற
பத்மாவதி பதியினை,
ஸ்ரீபாலாஜி ஏழுமலையானை....
வணங்குவோம்! வளம் பெறுவோம்!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
M.Sc.,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil.,Ph.D.,
முதுகலை ஆசிரியை,
அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513