குளம்

புதுக்கவிதை

குளம்

விளையாட்டுப் போல
ஒடுகிறது பொழுது
சோழிகளை உருட்டுபவன் 
யார் என்றே தெரியவில்லை

நிலவின் மீது 
தவளை குதிக்க
தவளையைப் பிடித்து 
நீர்பாம்பு விழுங்க
இரண்டையும் கபளீகரம் 
செய்கிறது இரவு

தொடரும் விளையாட்டை
வேடிக்கை பார்க்கும் குளத்திற்கு
சொல்வதற்கு ஒரு வார்த்தை இல்லை
ஒரு அலகிலா விளையாட்டின்
சாட்சி என்பதை தவிர

தங்கேஸ்