பக்ரீத் திருநாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படும் பக்ரீத் திருநாளான இந்நன்னாளில், எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்பதை பறைசாற்றும் வகையில், இறைத்தூதர் இப்ராஹிம் அவர்கள் இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.
இத்தியாகத் திருநாளில், திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்பு, அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும்
மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.