கரைதனில் மெதுவாய்
காலார நடந்த
என்னை
கடலுக்குள் மூழ்கடிக்கிறாய்
பார்வை ஒன்றில்
உணர்வு தந்து
உணவை மறக்கடிக்கிறாய்.
இமைகளில் பசியாய்
ஏறியமர்ந்து
இரவெல்லாம் விழித்து
என் உறக்கத்தைத்
திண்ணக் கேட்கிறாய்
நான்
சேர்த்து வைத்த
இனிமைச் சுவட்டினைச்
சுக்குச் சுக்காய்க் கிழிக்கிறாய்
இதயத்தைத் தைப்பதாய்க்
கண்ணுக்குள்
ஊசி விட்டு
உடலெங்கும்
வலி பரப்புகிறாய்
சுற்றம் துறந்து
சுற்றுப்புறம் மறந்து
தனியே தவிக்க விடுகிறாய்
மலையளவு ஆசையைப்
பந்தெனச் சுருட்டி
எனைக் கையேந்தச்
சொல்லித் தருகிறாய்
நான்
பாரம் தாங்காமல் கதறிடும் வேலையில்
” தொடரும்” எனச் சொல்லிச்
சிரிக்கிறாய்
மனதை வருத்தி
உடலை வாட்டும் இந் நோய்க்குக்
“” காதல்”” என்றா
பெயர் வைக்கிறாய்.
-சிவபுரி சு.சுசிலா